"விழுப்புரத்துக்கு மாற்றலாகிச் செல்லும் சிவகாசி டி.எஸ்.பி. பாஸ்கரனுக்காக, ஓய்வுபெற்ற தலைமைக் காவலர் தமிழ்காத்தான் பல பட்டாசுக் கடைகளுக்குச் சென்று பட்டாசுப் பண்டல்களை அள்ளிக்கொண்டு போகிறார். அந்தப் பட்டாசுப் பண்டல்கள் அனைத்தும் லாரிகளில் செக்ரட்டரியேட் வரை பயணிக்கிறது'’என்ற தகவல் நமக்குக் கிடைத்ததும், ரிட்டயர்ட் ஏட்டய்யா தமிழ்காத்தானிடம் பேசினோம்.
"நான் அந்தமாதிரி ஆளு இல்லீங்க..''’என்று ஒரே போடாகப் போட்டவர், டி.எஸ்.பி. பாஸ்கரனை நமது லைனில் வரச் செய்தார்.
"நக்கீரன்ல என்னைப் பத்தி என்னைக்கு நல்லா எழுதுனீங்க? எல்லாரும் சேர்ந்து என்னை ஊரை விட்டு கிளப்பணும்னு நெனச்சாங்க, அது நடந்திருச்சு. நீங்க என்ன வேணும்னாலும் எழுதிக்கங்க''’என்று விட்டேத்தியாகப் பேசிவிட்டு, லைனை துண்டித்தார் டி.எஸ்.பி. பாஸ்கரன்.
சிவகாசி கிழக்கு காவல்நிலைய போலீசார் சுப்பிரமணியும் ராஜ்குமாரும் பட்டாசுக் கடைக்காரரை மிரட்டி பணம் கேட்பதாக சோர்ஸ் ஒன்று தகவல் அளிக்க, போலீஸ்காரர் சுப்பிரமணியை தொடர்புகொண்டோம்.
அவரோ, எஸ்.ஐ. ராபியம்மாளை நம்மிடம் பேசவைத்தார். அவர், "போலீஸ்காரங்க பணம் கேட்டு மிரட்டுறதா புகார் எதுவும் வந்துச்சுன்னா சம்பந்தப்பட்ட பட்டாசுக் கடைக்காரரை என்கிட்ட பேசச் சொல்லுங்க, நான் நடவடிக்கை எடுக்கிறேன்''’என்றார் கூலாக.
அடுத்த சில நிமிடங்களில் நமது லைனுக்கு வந்த ஒரு காக்கிச் சட்டை, "அந்த பட்டாசுக் கடைக்காரர், வெளியிலிருந்து கள்ளத்தனமாகப் பட்டாசுகளை வாங்கி, ஒரு இடத்தில் வைத்து இல்லீகலாக பேக் செய்திருக்கிறார். இது அபாயகரமானது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உயிர் பயத்தில் காவல்துறைக்கு தகவல் தந்திருக்கிறார்கள். அந்த இரண்டு போலீஸ்காரர்களும் அங்கு சென்று பட்டாசுக் கடைக்காரரை விசாரித்திருக்கிறார்கள். பணம் கேட்டெல்லாம் மிரட்டவில்லை. அந்த ஆளு எப்பவுமே இப்படித்தான். போலீஸ்காரர்களை மீடியாக்களிடம் கோர்த்துவிட்டு, தன்னைக் காத்துக்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்''’என்றார்.
பட்டாசுத் தொழிற்சாலைகளிலும் பட்டாசுக் கடைகளிலும் அரசுத் துறையினர் லஞ்சம் பெறுவது காலகாலமாக நடந்துவருகிறது. தீபாவளி நெருங்கும் நேரத்தில் அரசுத் துறையினர் சிலர் பேய்த்தனமாக வசூல் வேட்டை நடத்துவார்கள். விருதுநகரிலும்கூட அப்படித்தான் நோட்டு போட்டு வசூல் செய் திருக்கிறார்கள் தீயணைப்புத் துறை யினர். டெக்னாலஜி காட்டிக் கொடுத்துவிடும் என்ற பயமே இல்லாமல், ஜி-பே, போன்-பே மூலம் எல்லாம் தீபாவளி இனாம் வாங்கி யிருக்கிறார்கள். வங்கிக் கணக்கில் அந்தப் பணத்தை டெபாசிட் செய்து, பிறகு பங்கு பிரித்துக்கொள்வதாக இருந்தார்கள்.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறையினருக்குத் தகவல் கிடைத்ததும், இரவில் விருதுநகர் தீயணைப்பு நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு பகுதிக்கு வசூலித்த பணத்துடன் டூ வீலரில் வந்துகொண்டிருந்த அரிச்சந்திரனையும், நவநீதகிருஷ்ணனையும் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் சோதனை நடத்தி, கணக்கில் வராத ரூ.59,000-ஐ பறிமுதல் செய்துள்ளனர். விசாரணையில் பட்டாசுக் கடைகள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் பலவற்றிலும் அரிச்சந்திரன், நவநீத கிருஷ்ணன், வினோத் ஆகிய தீயணைப்பு வீரர்கள் மூவரும் வசூல் நடத்தியதும், இவர்களில் வினோத், தீபாவளி இனாமாக வசூலிக்கப்பட்ட ரூ.4,38,500-லிருந்து தனது வங்கிக் கணக்கில் ரூ.3,79,000-ஐ டெபாசிட் செய்ததும் தெரியவந்துள்ளது.
சிவகாசி வட்டாரத்தில் உள்ள ஆயிரக்கணக்கான பட்டாசுக் கடைகளிலும், விதிமீறலாக பட்டாசு பண்டல்களை அதிக அளவில் குடோன்களில் பதுக்கி வைத்திருக்கும் நூற்றுக்கணக்கான லாரி ஷெட்டுகளிலும் சிவகாசி தீயணைப்பு வீரர்கள் வெறித்தனமாக வசூல் வேட்டை நடத்திவருகின்றனர்.
இந்நிலையில் சிவகாசி பகுதியில் பட்டாசுக் கடை நடத்தும் அழகர்சாமி "அன்னிக்கு அன்யூனிபார்ம்ல ஆறேழு பேர் டூவீலர்ல வந்தாங்க. "பயர் சர்வீஸ்ல இருந்து வந்திருக்கோம், பார்த்து பண்ணுங்கன்னாங்க. என் தம்பி மொத வருஷம் கடை போட்ருக்கான். வியாபாரம் சுமாராத்தான் இருக்குன்னோம். மொதல்ல மூவாயிரம் கேட்டாங்க. கடை பேரைப் போட்டு அமவுன்ட்ட எழுதச் சொன்னாங்க. ரெண்டாயிரம் கொடுத்தோம், வாங்கிட்டாங்க''’என்றார்.
சிவகாசி தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசனை தொடர்புகொண்டு "விருதுநகரில் விஜிலன்ஸிடம் மாட்டிக்கொண்டார்கள், சிவகாசியில் யாரும் இன்னும் சிக்கவில்லை'’ என்று பட்டாசுக் கடை வட்டாரத்தில் பேசப்படுவது குறித்து கேட்டோம்.
"அப்படியெல்லாம் வாங்கமாட்டாங்க சார். இங்கே எதுவும் கிடையாது. எங்க சைடுல இருந்து யாரும் வாங்குறது இல்ல''’என்று ஒரேயடியாக மறுத்தார்.
"தீபாவளியை நல்லவிதமாகக் கொண் டாடுபவர்கள் அனேகம்பேர் இருக்கிறார்கள். நாடி நரம்பெல்லாம் லஞ்ச சிந்தனையில் ஊறிப்போன சில அரசுத் துறை யினருக்கு, முறைகேடான வழிகளில் பணத்தைக் குவிப்பதற்கு வசதியாக, ஒரு சீசனைப் போல் வருடம்தோறும் தீபாவளி வந்துபோகிறது''’என்றார், தோழர் வெங்கடேசன்.